செங்கிஸ்கான் பிறந்தபோது மங்கோலியா என்ற தேசமே கிடையாது.நாடோடிகளாக – ஐம்பதுக்கும் அதிகமான இனங்களாகச் சிதறிக்கிடந்த மங்கோலிய மக்களை ஒன்று சேர்த்து , பூஜ்யத்திலிருந்து மாபெரும் சாம்ராஜ்யத்தை அவர் உருவாக்கினார். தலைமுறை தலைமுறைகளாக வீடே இல்லாமல், வயிற்றுப் பிழைப்புக்காக ஊர் ஊராக அலைந்த நாடோடி. சாப்பாட்டுக்கே வழியில்லாமல் எலிகளையும், அணில்களையும், நாய்களையும் வேட்டையாடித் தின்றவர். கீழ்ஜாதி என்று முத்திரை குத்தப்பட்டவர் பரந்து விரிந்த ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் அதிபரானார்.
போர்களின்போது செங்கிஸ்கான் கொன்று குவித்தவர்களின் எண்ணிக்கை நான்கு கோடியைத் தாண்டும். காட்டு மிராண்டி , ரத்தக் காட்டேரி என்று பல சரித்திர மேதைகளால் சித்தரிக்கப்பட்ட அதேவேளையில், மங்கோலியர்கள் செங்கிஸ்கானைத் தங்கள் தேசத்தந்தையாக, பொன்மனச்செம்மலாக, கடவுளாக இன்றும் மதிக்கிறார்கள்.
பெண்மையை மதித்த – சாதி வேற்றுமைகளை வெறுத்த இவர் கொண்டுவந்த சில நியமங்கள் பதின்மூன்றாம் நூற்றாண்டில் இத்தகைய புரட்சி சிந்தனைகள் எப்படி இவர் மனதில் உருவாகின என்னும் பிரமிப்பை ஏற்படுத்துபவை.
எதிரிகளை துவம்சம் செய்ய அவர் காட்டியது ரத்தவெறி பிடித்த ஓநாய் முகத்தை. குடிமக்களுக்கு நல்லது செய்யக் காட்டியது மருள்விழி மானின் சாந்த சொரூபத்தை. இருதுருவங்களான ஓநாயும் மானும் ஒரே மனித நெஞ்சிற்குள் குடியிருக்க முடியுமா? முடிந்திருக்கிறதே! சாத்தியப்படுத்தியிருக்கிறாரே இந்த மனிதர்!
உலக வரலாறு சில பார்வைகள் (Glimpses of world history) என்ற தனது நூலில் நேருகூட வரலாற்றிலேயே மாபெரும் இராணுவத் தளபதி செங்கிஸ்கான்தான். அலெக்சாண்டரும் சீசரும் இவர் முன்னால் கத்துக்குட்டிகள் என்றாரே. அது எதனால்?.
பதில் காண படியுங்கள்!

Reviews
Clear filtersThere are no reviews yet.