புதுமைப்பித்தன் கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார். தொடக்கக் கல்வியைச் செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் பயின்றார். தாசில்தாராகப் பணி புரிந்த இவரின் தந்தை ஓய்வு பெற்றமையால், 1918-இல் இவரது சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்பினார். அங்குள்ள ஆர்ச் யோவான் ஸ்தாபனப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்பு நெல்லை இந்துக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1932 சூலையில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கமலாவை மணந்தார்.[8][9][10]
1933-இல், புதுமைப்பித்தனின் முதல் படைப்பான குலோப்ஜான் காதல், காந்தி இதழில் வெளிவந்தது. 1934-இலிருந்து, இவரது படைப்புகள் மணிக்கொடியில் வெளிவரத் தொடங்கின. மணிக்கொடியில் வெளிவந்த இவரின் முதல் சிறுகதை ஆத்தங்கரைப் பிள்ளையார். இந்தக் காலகட்டத்தில் இவர் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். இவர் வாழ்ந்த இடங்களான திருநெல்வேலியையும் சென்னையையும் மையமாகக் கொண்டே இவரது படைப்புகள் அமைந்தன. இவரது சிறுகதைகள் கலைமகள், ஜோதி, சுதந்திரச் சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் ஆகிய பத்திரிகைகளிலும் வெளியாகின. 1940-இல் புதுமைப்பித்தனின் கதைகள் என்கிற சிறுகதைத் தொகுப்பு வெளியானது. சென்னையிலிருந்த காலத்தில் ஊழியன், தினமணி, மற்றும் தினசரியிலும் பணிபுரிந்தார்.[9]
புதுமைப்பித்தன் திரைப்படத் துறையிலும் ஆர்வம் கொண்டிருந்தார். ஜெமினி நிறுவனத்தின் அவ்வை மற்றும் காமவல்லி படங்களில் பணிபுரிந்தார். பின்பு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான “பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்” -ஐத் தொடங்கி வசந்தவல்லி என்ற படத்தைத் தயாரிக்க முயன்று தோல்வியுற்றார். எம். கே. தியாகராஜ பாகவதரின் ராஜமுக்தி திரைப்படத்திற்கு வசனம் எழுதுவதற்காகப் புனேவில் சில மாதங்கள் வாழ்ந்தார். அங்கு அவர் கடுமையான காச நோய்க்கு ஆளாகி சூன் 30, 1948-இல் காலமானார்.

Reviews
Clear filtersThere are no reviews yet.